Tuesday, 20 March 2018

Mazhai

(அந்த மழையில்... - கவிதை)
அந்த மழையில்...

“அந்த மழைநாளில்

மிகப்பெரிய ஆச்சர்யமொன்று

நடந்தது.

மொட்டை மாடியில்

காய்ந்த துணிகளை

அவசர அவசரமாக

அள்ளியெடுக்க விரைந்தபோது

அவளைப் பார்க்க நேர்ந்தது.

எதிர் வீட்டின் மொட்டை

மாடியில் இரு கைகளையும்

அகல விரித்தபடி

வானம் பார்த்து

நின்றிருந்தாள்.

அச்சிறுமியை இதற்கு

முன்னும் பார்த்திருக்கிறேன்

இன்றவள் புதிதாய்த் தெரிந்தாள்.

விரித்த இரு கைகளாலும்

ஏந்தி ஏந்தி எறிந்து

கொண்டிருந்தாள் மழைத்துளிகளை.

அவ்வப்போது ஒரு

அரை வட்டமடித்து

மழையின் அனைத்துத்

துளிகளையும்

மேனியெங்கும் வாங்கிக்

குதூகலித்தாள்.

இப்பெரு நகரத்தில்

இது பேராச்சர்யம் எனக்கு...

ஒரு கணம்

அவளாகியிருந்தேன் நான்.

என் பதினைந்து வருடங்களைப்

பின் தள்ளிவிட்டு.

மழை இரைந்துகொண்டே

இருந்தது.

குக்கர் விசில் சத்தம்

என்னைப் பதட்டப்படுத்த

அவசரமாகப் படியிறங்கினேன்.

அவளின் சிறு குழந்தைமையை

எக்கணத்திலும் நிராகரித்துவிடாத

புகுந்தவீடொன்று அமைய வேண்டுமென்ற

அவளுக்கான பிரார்த்தனைகளோடு...”

                                             - இரா.பூபாலன்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை