மழலையுடனான பயணம்
ஒரு முழு வாழ்வின்
ஜென்ம பிரயாசைகளை
மீட்டெடுத்துத் தருவது
பேருந்தின் முன்னால் அமர்ந்திருக்கும்
குழுந்தையின் பிரதியுபகாரமெனவும் கொள்ளலாம்.
அப்படித்தான் அக்குழந்தை என்னை வழிநடத்துகிறது
உருண்டு திரண்ட விழியில்
கழிந்து போகும் நிமிடங்களின் வனப்புகளை
பச்சைப் பசேலென்ற சமவெளியாய்
ஜன்னலுக்கருகாமையில் இறைத்து நிரப்புகிறது.
எத்துணை அரிய வெளிக்காட்சியனைத்தும்
காற்றில் படபடத்துப் போகும்
மழலையின் மயிர்க் கற்றைகளில்
முட்டி மோதி தாழ்ந்து வீழும் அத்தருணம்
ஒரு வரலாற்றுப் பேழையின்
பக்கங்களை ஒத்தது.
ஒரு குழந்தையாகவே அக்குழந்தையை
நான் பாவித்துக்கொண்டிருக்கையில்
அது என்னை ஒரு குழந்தையாகவோ
அல்லது மிருகக்காட்சி சாலையின்
கை கால் முளைத்த ஒரு ஜந்துவாகவோ
உருவகிக்க எத்தனித்து இருக்கலாம்.
இன்னுமின்னும் தன் சிறு கரம் நீட்டி
என்னை அது ஏதோ உணர்த்த முயலும் வேளை
அரைகுறை புரிதல்களிலேயே
என் இருப்பிடம் நோக்கி
என்னை
எறிந்துவிட்டுச் செல்கிறது
வாழ்க்கை.
No comments:
Post a Comment