அன்பின் தீக்கொடி
மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்
விம்மி வலித்துக் கசிகிறது எனதன்பு – நீயோ
அதனைக் கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்
வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி
ஓயாமல் அலைகின்றேன் – நீயோ
மனப்பிறழ்வுக்கான மருந்தொன்றைச் சிபாரிசு செய்கிறாய்
இயந்திரத்திற்குச் சிக்கிய செங்கரும்பாய்
வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு
புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு.
No comments:
Post a Comment