Monday, 30 April 2018

Minnambalam

சிறப்புக் கட்டுரை: ஆண்களின் உலகில் பெண்களின் அவல வாழ்வு

ஆசிஃபா ஃபாத்திமா

அன்று காஷ்மீர் சிறுமி வன்புணர்வுச் செய்தியை வீட்டில் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தோம். மனதை உருக்குலைத்துப்போடும் அச்சம்பவம், என்னை மிகவும் தாக்கிவிட்டது. இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இப்படி பல செய்திகள் என்னை துன்புறுத்தியிருக்கின்றன. இதனாலேயே பெரும்பாலும் நான் செய்திகள் வாசிப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால், இப்போதெல்லாம் வாசிக்க வேண்டிய கட்டாயம்.

அன்று ஒரு நாள் ஒரு செய்தி. டெல்லியிலோ, மும்பையிலோ ஒரு இடத்தில், தாயை பலாத்காரம் செய்யும்போது, அவளது கையில் இருந்த, பிறந்து சில தினங்களே ஆன குழந்தை அழுததனால் அதை ஓடும் வண்டியில் இருந்து தூக்கி வீசிவிட்டனர். அந்தத் தாய் அதன் பிறகு பிழைத்துக்கொண்டாள். ஆனால், அவளது மனநிலை எப்படி இருக்கும்? இப்போது அவள் எப்படி இருக்கிறாள்?

இதையெல்லாம் பெரும்பாலும் நாம் யோசிப்பதில்லை. எல்லாவற்றையுமே வெறும் செய்திகளாகக் கடந்துவிடுகிறோம். ஆனால், ஏனோ எனக்கு இவை அனைத்தும் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டன. இப்படி தினமும் ஏதாவது ஒரு செய்தி, ஒரு சம்பவம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும் என்று நாமும் கடந்து சென்றுவிடுகிறோம். 

ஆதாரமான பிரச்சினை எது?

இந்தச் செய்தி முடிந்ததும் அப்படித்தான். “சரி, என்ன செய்ய? எல்லாம் நேரம்…” என்று சொல்லிச் சாப்பிட அமர்ந்துவிட்டோம்.

அப்போது அம்மா கேட்டாள், “எப்படி இவங்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வருது? ஒருத்தங்களோட வலி அவங்களுக்கு சந்தோஷத்த தருதா? ஒரு பொண்ண இப்படி கட்டாயப்படுத்தி உறவு வெச்சுக்கறது மூலமா என்ன சந்தோஷம் கிடைச்சிரும்?”

நான் எப்போதும் போல எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து மாமா சொன்னார், “பொண்ணுங்க ஆம்பளைங்க கைக்குள்ள இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்ல. படிக்கப் போறேன், வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு திமிருல ஆடுனா இப்படித்தான் நடக்கும். இயற்கை விதியே இதுதான். ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பு. பெண்கள் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் சந்தோஷமாக வாழலாம்.”

இதுதான் பிரச்சினை. ஆண்களின் இந்த எண்ணம், இந்தப் புரிதல், இதுதான் நம் பிரச்சினை.

பெண்கள் ஆண்களின் கைக்குள் இருக்க வேண்டும் என்கிற எண்ணம். இது நம் குடும்பங்களில் எவ்வளவு ஆழமாக வேர் விட்டிருக்கிறது என்று தெரியுமா? ஆண்கள் சிறிய வயதிலேயே இப்படி வளர்க்கப்படுகிறார்கள். அம்மாவைக் கட்டுப்படுத்துகிறார்கள். தங்கள் விருப்பங்களை, எண்ணங்களை அம்மாவின் மீது திணித்து, அதை நடைமுறையும்படுத்துகிறார்கள். ஒரு வீட்டில், பையனுக்குக் கீரை பிடிக்காது என்றால் அவ்வீட்டில் கீரை வைப்பதே இல்லை. அவர்களிடம் சென்று கேட்கும்போது, “பையன்தானேமா எல்லாம்?” என்று சொல்கிறார்கள்.

இந்த அபரிமிதமான அன்பை, அவன் தவறாகப் புரிந்துகொண்டு, வாழ்க்கையில் எப்போதுமே அதை நிலைநாட்டுகிறான். மனைவியிடம், தோழியிடம், காதலியிடம், சகோதரியிடம். அனைவரிடத்திலும் அவனது ஆதிக்கமே நிலவுகிறது. இதுதான் தலையாய பிரச்சினை. பெண்கள் ஆண்களுக்கு ‘அன்பு’ என்ற பெயரில் அடங்கிப் போவது.

இதை Take Off என்ற மலையாளப் படத்தில் அழகாக ஒரு வசனத்தில் நடிகை பார்வதி கூறுவார். அவருக்கு முதல் திருமணம் விவாகரத்தாகிவிடும். பிறகு இரண்டாவது திருமணம் நடக்கும். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை அதை ஏற்றுக்கொள்ள மாட்டான். அதற்கு பார்வதி சொல்லுவார், “படிக்கும்போது அப்பாவிற்குப் பயந்தேன்; திருமணத்திற்குப் பிறகு ஃபைசல்; இப்போது இவன். நான் என்ன செய்வது?”

எவ்வளவு அப்பட்டமான உண்மை இது?

பெண்கள் ஆண்களின் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைச் சிறு வயதிலேயே ஆண்களின் மனதில் விதைத்துவிடுகிறோம். அந்த எண்ணம் எவ்வளாவு ஆபத்து என்று நமக்கு இப்போது தெரியாது. மனைவி தன் விருப்பத்தின்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினால், அவளை அடித்து உதைப்பது, வீட்டை விட்டு அனுப்புவது போன்ற செயல்கள் அனைத்தும் இந்த எண்ணத்தின் நீட்சியே. ஒரு பெண் தனக்கு நிகராக வெளியில் செல்கிறாள், இரவில் தனியாக அலைகிறாள், அவளுக்கும் சம உரிமை வழங்கப் பட்டு இருக்கிறது என்பதையே சில ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

காஷ்மீரக் குழந்தை விஷயத்திலும் இந்த ஆதிக்கச் சிந்தனைதான் வெளிப்படுகிறது. நமக்கு நிகராக அந்த இனத்தவர் எப்படி வரலாம், அப்படி வந்தால் என்ன செய்வோம் என்று பார்… என்றுதான் இந்தக் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்பயா விஷயத்திலும் இதேதான் நடந்தது. இரவில் எப்படி ஒரு பெண் தனியாக அலையலாம்? இந்தச் சிந்தனைதான் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆணி வேர்.

பெண்ணின் பாலியலும் குடும்ப கௌரவமும்

அடுத்ததாக, ஒரு இனத்தின், குடும்பத்தின் கௌரவம், மரியாதை ஆகியவை எல்லாம் அந்தக் குடும்பத்துப் பெண்ணின் பிறப்புறுப்பில் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலம் முதல் இப்போதுவரை பல படங்களிலும் இதுதான் காட்சிப்படுத்தப்படுகிறது. நிஜத்திலும் இதுதான் நம்பிக்கை. ஒரு குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அப்பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்தால் போதும்.

மேலே சொன்ன உரையாடலில் மூன்று முக்கியமான கருத்துகள் இருக்கின்றன. முதலில், ஆண்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க வேண்டும். அடுத்தது, ஆண்கள்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு. இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பெண்களுக்கு இப்போது யாரால் இவ்வளவு பிரச்சினை? ஆண்களால்தானே? நம் வீட்டு ஆண்களின் மனதில் பாலினப் பாகுபாடு / பாலின மேலாதிக்க உணர்வு இல்லாமல் வளர்த்தாலே போதும். பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம்.

காதல் தோல்வி என்றால் ஆசிட் வீசுவது; மனைவியை வீட்டிற்குள் கொடுமைப்படுத்துவது ஆகிய செயல்கள் எப்போது ஆரம்பிக்கின்றன? காதலியோ மனைவியோ தன் கருத்தோடு முரண்பட்டால் தொடங்குகிறது. இந்தக் காதல் வேண்டாம் என்று சொன்னால் அவளை வசைபாடுவது, பாடல் எழுதுவது என்று கீழ்த்தனமான சிந்தனைகள் எதனால் வருகின்றன? “போயும் போயும் ஒரு பொண்ணு வேண்டாம் சொல்லிட்டாடா!” இதுதான் காரணம். இந்த மனநிலையை எப்போது நம்மால் மாற்ற முடிகிறதோ, அப்போதுதான் சமூக மாற்றம் நிகழும்.

எது இயற்கையின் நியதி என்றே பலருக்குத் தெரியவில்லை. பெரும்பான்மையான உயிரினங்களில் பெண் இனம்தான் தலைமைப் பொறுப்பு தாங்குகிறது. தேனீக்கள், யானைகள், சிங்கங்கள், எறும்புகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன், மனிதர்களிலேயே அப்படித்தான். நம் சமூகக் கட்டமைப்பு மாற்றத்தினால் இப்படி ஒரு சூழலில் வந்து நிற்கிறோம்.

ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அல்லது பேசாமலும் இருக்கலாம். ஆனால், பெண்கள் படிக்கச் செல்வதினால், வேலைக்குச் செல்வதினால்தான் இந்தப் பிரச்சினை என்று கூறுவது அறியாமை மட்டுமல்ல, ஆதிக்க உணர்வின் தடித்தனமும்கூட. ஆனால், இதுதான் பல வீடுகளில் நடப்பது. இன்றளவும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் புரிய வைப்பது பெரும்பாடு. அதோடு ‘வாயாடி’ என்ற பட்டத்தையும் பெற வேண்டியிருக்கிறது.

என்ன செய்வது, பெண்ணாகப் பிழைக்க வேண்டுமே?

Friday, 27 April 2018

Prapanchan

"எனது வாசகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் விஷயம் என எப்போதும் எனக்கு ஒன்று உண்டு. இன்று இந்த பிறந்தநாளில்கூட அதைச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன். எவரை நான் நல்ல வாசகர் என்று கருதுவேன் என்றால், அவர் எழுதியது இது போதும். இதற்குமேலே நான் எழுதிக்கொள்கிறேன் என்று எந்த ரசிகன் என்னை பார்த்து சொல்கிறானோ அவனைத்தான் நான் முழுமையான ரசிகனாக, வாசகனாகக் கருதுவேன். ஏனென்றால் நான் அறிவு கொளுத்துகிறவன் என்றால் எரிகிறவன் வாசகன். ஆகவே அந்த வாசகனைத்தான் நான் அதிகம் கவனத்தில் கொள்கிறேன், மதிக்கிறேன்.

ஒரு கதை நல்ல கதை என்று சீராட்டப்படுகிறது என்றால் முதலில் நான் நன்றி செலுத்துவது வாசகனுக்குத்தான். ஏனென்றால் அந்தக் கதையை கரம் பற்றி கைகளில் வாங்கிக்கொண்டு, அவர்கள் இட்டுச் சீராட்டி அதை வளர்த்தெடுக்கிறார்கள் என்றே கருதுகிறேன். என்னால் நூறு சதவீதம் ஒரு கதையை எழுத முடியாது. அப்படி எழுதக் கூடாது என்கிறது இந்த உலகம். ஒரு கதையை நாற்பது சதவிகிதம்தான் நான் சொல்கிறேன். மீதியுள்ள 60 சதவிகித்தை என் ரசிகன், ஆணோ பெண்ணோ அவர்கள் எழுதிக் கொள்கிறார்கள். அவர்கள் எழுதிக்கொள்ள அவர்களை எழுத்தாளர் ஆக்குவதுதான் என் எழுத்தின் கடமை. அவர்கள் எழுதித்தான் தீர வேண்டுமென்று, பேப்பரிலோ பேனாவிலோ அல்லது மற்ற கருவிகளிலோ கிறுக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. ஆனால் அவர்கள் மனசுக்குள் எழுதிக்கொள்கிறார்கள்.

நான் எழுதிய கதையை அவர்கள் மனதிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து அவர்கள் கற்பித்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் ஒரு ஆத்மார்த்த உறவு என்று சொல்லிக்கொள்வார்கள். ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு வாசகனுக்கும் ஏற்படுகிற உறவு. ஒரு தந்தைக்கும் மகனுக்கும், ஒரு தாய்க்கும் குழந்தைகளுக்கும் இருக்கிற ஒரு மேன்மையான உறவு என்று நான் கருதுகிறேன். என்னை, கீழ்மை அடையும்படியான கதையை எழுத இதுவரை எந்த ரசிகரும் சொன்னதில்லை. அல்லது இப்படி எழுதியிருக்கலாமே என்று எந்த ரசிகரும் சொன்னதில்லை. நான் எதை எழுதியிருக்கிறேனோ அதை சரியாக எழுதியிருக்கிறேன் என உணர்கிறார்கள். அதன் வழி நான் ஊசி போல முன்னால் செல்கிறேன்; நூலைப் போல அவர்கள் பின்னால் வருகிறார்கள். ஆனால் நூலால்தான் ஒரு உலகம் கட்டப்படுகிறதே தவிர ஊசியால் அல்ல என்பதை நான் நன்றாகவே அறிகிறேன்” 

Thursday, 26 April 2018

Su.Ra

உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி 

 நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

 எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

 எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

 ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு.

சுந்தர ராமசாமி

கொல்லிப்பாவை அக்டோபர் 1985

Sunday, 22 April 2018

Vadivelu

வாட்ஸப் வடிவேலு: சம்மர் டூர் எங்கே?

என்ன சார்... பத்து நாள் லீவ் போல... ஏதாவது சம்மர் டூரா? - கேட்டபடியே வந்தார் அவர்.

இல்லைங்க. பசங்களுக்கு லீவு விட்டாச்சு. கொண்டுபோய் ஒரு மாசம் எங்க அப்பா, அம்மாகிட்டே விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நானும் பத்துநாள் தங்கிட்டு வரலாம்னு. ஊருக்குப் போய் நாளாச்சே.?.. பதிலளித்தார் இவர்.

அட என்ன சார் நீங்க.? உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா.? போரடிக்காதா.? அப்பா, அம்மாவை இங்க வரவச்சிட்டு, ஜாலியா இருக்கறதை விட்டுட்டு.. என்றார் அவர்.

வசதியெல்லாம் மனசைப் பொறுத்ததுதாங்க. மனசு சந்தோஸமா இருந்தா போதுங்க. அதுவுமில்லாம, ஊர்ல சொந்தக்காரங்க எல்லோருக்கும் நம்ம பசங்களையும், நம்ம பசங்களுக்கு அவங்களையும் முழுசா தெரிய வேணாமா.? எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும்.?.. கேட்டார் இவர்.

சார்.. பையன் பத்தாவது எழுதியிருக்கான். அடுத்து கோச்சிங் கிளாஸ், கான்ஸன்ட்ரேஷன் கிளாஸ், யோகா கிளாஸ்னு ஏகப்பட்ட விஷயமிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, ஊருக்குப் போய் பசங்களோட எதிர்காலத்தை வீணாக்குறீங்க சார்.. என்றார் அவர்.

நீங்க சொன்ன அத்தனை கிளாசும் கூட்டுக் குடும்பத்துலேயே இருந்ததுங்க. அதை விட்டுட்டு பொழைக்க தனியா வந்ததிலதான், இப்போ எல்லாத்துக்கும் கோச்சிங் கிளாஸ் தேட வேண்டியிருக்கு.. என்றார் இவர்.

காம்பெடிஷன் அதிகம் சார். இப்போலேர்ந்தே எல்லாத்துக்கும் பசங்களை தயார் பண்ணணும். அதுக்குத்தான் சொல்றேன்.. என்றார் அவர்.

தன்னம்பிக்கையும், தைரியமும் தரதே நம்ம உறவுகள்தான் சார். அதை இழந்துட்டு, எதைக் கத்துக்கிட்டும் பிரயோஜனமே இல்லை சார்.. என்றார் இவர்.

புரியலை சார்.. என்றார் அவர்.

பிரச்சனையே அதான். இங்கே நிறைய பேர் தன் பசங்க எல்லாத்தையும் கத்துக்கணும்னு நெனக்கறாங்களே தவிர, வாழக் கத்துக் குடுக்கறதே இல்லை.

சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சார். அத்தனை பேரையும் பசங்களுக்கு எப்படி சமாளிக்கறது, எப்படி பழகறதுன்னு தெரிஞ்சாதான், நாளைக்கு வெளி உலகத்துல எப்படி எல்லோர்கிட்டேயும் பழகறதுன்னு தெரியும். அதுவுமில்லாம, நமக்காக இத்தனை பேர் இருக்காங்க அப்படின்ற தைரியமும் வரும். நாம தப்பு செஞ்சா இத்தனை பேர் கேட்பாங்கன்ற பயமும் இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி, வருஷத்துல இந்த ஒரு மாசத்தை எதிர்பார்த்து வருஷம் பூரா காத்திட்டிருக்கற வயசானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. பணம் சம்பாரிக்க, படிக்க, பிழைக்கன்னு ஏதாவது ஒரு காரணத்தால பிரிஞ்சு கிடக்கிற குடும்பம், இந்த ஒரு மாசம் இணைஞ்சிருக்கறதால அவங்க அடையற சந்தோஷத்தை, நீ என்ன விலை கொடுத்து, எதை வாங்கித் தந்தாலும் கிடைக்காது.

இந்த வயசுல எங்க அப்பாவுக்கு நான் அடங்கி நடக்கறதையும், எங்க அம்மா மடில நான் படுத்து தூங்கறதையும் எம் பிள்ளை பார்த்தாலே போதும். பாசம்னா என்னன்னு புரிஞ்சுப்பான். என்னை கொண்டாட ஆரம்பிச்சுடுவான். இதையெல்லாம் கோச்சிங் கிளாஸ் சொல்லிக் குடுக்காது.

பசங்களுக்கு எல்லாம் தெரியணும்கறதைவிட, நல்லது தெரியணும்கறதுதான் முக்கியம்.

எம் பசங்க நிறைய சம்பாரிக்கறான்.. பெரிய அதிகாரி.. அப்படின்றது எனக்குப் பெருமையில்லை. எம் பையன் என்னை நல்லாப் பார்த்துக்கறான்னு முழுமனசோட நான் கடைசி காலத்துல சொல்லணும். எங்கப்பா என்னை நல்லா வளர்த்தார்னு அவன் சொல்லணும். அதுதான் முக்கியம். அதுக்கு நான் அதுமாதிரி நடந்து காட்டணும். ஏன்னா, எம் பசங்களுக்கு நான்தான் ஹீரோ. நான் செய்யறதுதான் சரின்ற நம்பிக்கை வரணும். அதை எங்க அப்பாகிட்டே நான் நடந்துக்கற முறை கத்துக் குடுக்கும்.

நமக்கும் வயசாவும். நாளைக்கு எம் பையனும் அப்பா ஆவான். அவன் வாழ்க்கைலையும் இதேபோல சம்மர் லீவுன்னு ஒண்ணு வரும். அப்போ அவன் என்னைத் தேடணும். அவனுக்காக மட்டுமில்லை.. அவனோட பசங்களுக்காகவும். அதுக்குத்தான் இவ்வளவும்... என்றார் இவர்.

அது வந்து.. என இழுத்தார் அவர்.

இதோ பாருங்க நண்பரே.. எம்மேல பாசமா இருப்பான்னு எம் பையன் என்னைக் கேட்கலை. ஆனா, நான் இருக்கேன். அதேமாதிரி, எம்மேல பாசமா இருப்பான்னு நான் அவனை கேட்க மாட்டேன். ஆனா, அவன் இருப்பான். அதுக்கு, பாசம், குடும்பம், உறவுன்னா அவனுக்குத் தெரியணும். ஒரு அப்பாவா நான் தெரிய வைக்கிறேன். எனக்கு எங்கப்பா கத்துக் குடுத்ததை நான் கத்துக்குடுக்றேன். இதுதான் இப்போதைக்கு தேவையான கோச்சிங் கிளாஸ்.

நாம விதைச்சது பெரிய மரமாகறது முக்கியம்னு சில பேர் எண்ணம்.

அது விஷமரமா யாருக்குமே பயனில்லாம போயிடக் கூடாதுங்கறது என் எண்ணம்.

தலைமுறைங்கறது நாம மட்டுமே இல்லை. நமக்கு முன்னாடி இருந்ததுங்கறதை நாம நிரூபிக்கறோம். நமக்குப் பின்னாடியும் இருக்கணும். அதையும் நிரூபிக்க வைக்கணும். அதுக்கு குடும்பம், உறவுகளை விட சிறந்த பல்கலைக்கழகம் எதுவுமே இல்லை.

சரி விடுங்க. நீங்க சம்மர் டூர் எங்க போறீங்க. ? கேட்டார் இவர்.

சிறிது நேர மௌனத்திற்குப் பின் சொன்னார் அவர்..

என் தலைமுறையை எம் பசங்களும் புரிஞ்சுக்கற இடத்துக்கு.

நானும் புரிஞ்சுக்கணுமே...

வெளியேறும்போது அவர் மனதில் நிறைவு நடையிலேயே தெரிந்தது.

உறவுகளோடு வாழ்வதைவிட, வேறெதையுமே வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கப் போவதில்லை.

ஏனெனில்,

உறவுகள்தான் வாழ்வின் படிப்பினை..

அனுபவம் கற்றுத்தரும் ஆசான்.

இன்றைய நன்னாளுக்கான வாழ்த்துகளும், வேண்டுதல்களும்.

இப்படிக்கு சுந்தர்.

- சுந்தரு.. கண்டிப்பா இது நீ எழுதுனது இல்ல... ஒழுங்கா உண்மைய சொல்லிடு

World books day

காலை 7, திங்கள், 23 ஏப் 2018

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி!

ந.ஆசிபா பாத்திமா பாவா

உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட்டிய சிறப்புக் கட்டுரை

நான் கதைகளைப் பற்றி உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். அவை வெறும் பொழுதைப் போக்குபவை அல்ல. அவை மன, உடல் நோய்களையும் மரணத்தையும் எதிர்கொண்டு விரட்டியடிப்பவை. உங்களிடம் கதைகள் இல்லையென்றால், உங்களிடம் எதுவுமே இல்லையென்று அர்த்தம்.

- லெஸ்ஸி மார்மோன் சில்கோ

எங்கோ எப்போதோ வாசித்த இச்சொற்கள் மண்ணில் வேர் பிடிப்பதைப் போல, மனதில் ஆழப் பதிந்துவிட்டன. நம் நாட்டில் வாசிப்புக்கு, குறிப்பாகக் கதைகளாய் வாசிப்பதற்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டும். காரணம் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, கதைகளை, நாவலை வாசிப்பது என்றால் ‘அது வேலை வெட்டி இல்லாதவன் பொழுதுபோக்கச் செய்வது’ என்றே கூறுவர். என் சித்தியும் அப்படித்தான் சொல்வார். “கதை வாசிச்சு என்ன பண்ண போற?” என்பதுதான் அவரின் முதல் கேள்வி. இதுபோல பலர் என்னிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்; வார்த்தைகள் வெவ்வேறானாலும் கேள்வியின் சாராம்சம் ஒன்றாகத்தான் இருக்கிறது.

சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களுக்கும் அறிவியல் சார்ந்த புத்தகங்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதையோ, அங்கீகாரமோ பெரும்பான்மையான வீடுகளில், பள்ளிகளில் கதைப் புத்தகங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், புத்தகங்களைப் பற்றிய போதிய தெளிவு நம்மிடையே இல்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், “புத்தகங்கள் வாசியுங்கள், அது உங்களை உயர்த்தும்” என்ற பொதுவான அறிவுரையே வழங்கப்படுகிறதே அன்றி, என்ன புத்தகங்கள் வாசிக்கலாம், அதை எப்படி வாசிப்பது என்ற வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படுவதேயில்லை.

இதன் விளைவாக, நாம் கிடைத்த புத்தகங்களையெல்லாம் படிக்கிறோம். “கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்” என்று பழமொழி கூறுகிறோம். ஆனால், அதன் உண்மையான அர்த்தம், “ஒரு விஷயத்தைக் கண்டு படிப்பவன், பண்டிதன் ஆவான்” அதாவது, எந்தவொரு செயலையோ, கலையையோ கண்டு படிப்பவன் பண்டிதன் ஆவான். ஆனால், நாம் அதைத் திரித்துப் புரிந்துகொண்டு, அதை நடைமுறையும்படுத்துகிறோம்.

எப்போதுமே நாம் வாசிக்கும் விஷயங்கள், நம்மை ஆழமாகப் பாதிக்கக்கூடியவை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு குறுங்கவிதையோ, கதையோ, நாவலோ... நாம் வாசித்தால், நம்மிடம் ஒரு தாக்கத்தை அந்தப் படைப்பு நிச்சயமாக ஏற்படுத்தும். அதை நாம் உணர்கிறோமா, இல்லையா என்பது நம்மைச் சார்ந்த விஷயம். நேரத்தைக் கழிக்கும் ஒரே நோக்கோடு வாசிக்கப்படுபவை நமக்கு நல்லவை அல்ல. காரணம், நாம் வாசிக்கும்போது அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் நம் ஆழ்மனதில் பதியக்கூடியவை. காலத்தின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் அவை நமக்குக் கை கொடுக்கும்.

இப்படியான ஒரு புத்தகத்தை நான் வாசிக்க நேர்ந்தது. கல்லூரி படிக்கும் நாள்களில் ரவீந்தர் சிங் என்ற புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரின் தீவிர வாசகியாக நான் இருந்தேன். அவரது முதல் மூன்று புத்தகங்கள் மிகவும் அழகான உணர்வுகள் நிரம்பியவை. நான்காவது புத்தகம் சுமார். அதற்கடுத்து வந்த “This love that feels right” என்ற புத்தகத்தை வாசித்த பிறகுதான், ஒரு எழுத்தாளரை நம்மால் வெறுக்கவும் முடியும் என்று கற்றுக்கொண்டேன். இப்படியாகப் பல அனுபவங்கள் இருக்கின்றன.

சிறு வயதிலிருந்தே நான் தீவிரமாகப் புத்தகம் வாசிப்பவள். நான் பள்ளி சென்று வாசிக்க ஆரம்பித்ததும் எனக்கு அம்மா அப்பா வாங்கிக் கொடுத்த முதல் பிறந்த நாள் பரிசு ஒரு புத்தகம்தான். Enid Blyton புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து வாசித்த நாள்களும் க்ரைம் நாவல்களில் மூழ்கிக் கிடந்ததும் பசுமையாக நினைவிருக்கிறது. நான் சிறு வயதில் அநேகமாக வாசித்தது க்ரைம், த்ரில்லர் நாவல்கள்தான். இவற்றைத் தாண்டி, நான் வாசித்த முதல் நாவல், Frances Hodgson Burnett எழுதிய The Secret Garden என்ற நாவல்தான். மிக மிக அழகான குழந்தைகளின் கதை என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து பல புத்தகங்கள் வாசித்தேன். கதைப் புத்தகங்கள். என்னிடம் கேட்கப்பட்ட, கேட்கப்படும் கேள்வி, “இப்படிக் கதை கதையா வாசிச்சு என்னாச்சு? என்ன படிச்ச?”

இந்தக் கேள்விக்கான சுருக்கமான பதில்:

மென் உணர்வுகளும் பக்குவமும்

கதைகளும் நாவல்களும் இலக்கியமும் நம்மை sensitive ஆக மாற்றிவிடும். தொடர்ந்து வாசிப்பவர்களால் இதை நிச்சயமாக உணர முடியும். மென் உணர்வுகளையும் மிகச் சிறிய மாற்றங்களையும் நாம் எளிதில் புரிந்துகொள்வோம். ஒரு புத்தகம் வாசித்தவுடன் இது நடப்பதற்குச் சாத்தியங்கள் குறைவுதான். ஆனால், தொடர் வாசிப்பும் பக்குவமும் நம்மை இதை உணரச் செய்யும்.

அடுத்ததாக, அனைவரும் சொல்வதைப் போல கட்டுரைகள், செய்திகளை நேரடியாக வாசித்து உள்வாங்கிக்கொள்வது கடினம். பெண்ணியம் சார்ந்த ஒரு கட்டுரையை, சுயசரிதையை வாசித்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் சொல்லாமல் போன விஷயங்களையும் புரிந்து மனத்தினுள் கொண்டுசெல்ல ஒரு பக்குவம் தேவை. அந்தப் பக்குவமான மனதை, தொடர்ந்து கதை வாசிக்கும் பழக்கம்தான் நமக்கு வழங்குகிறது.

அறிவு மட்டுமல்ல

வாசிப்பு என்பது அறிவை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமேயல்ல. மனதை ஆற்றுப்படுத்துவதற்கான மருந்தும்கூட. வெறும் அறிவைச் சார்ந்து மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் நம் சமூகத்தில், மனதைப் பற்றி அதில் நிகழும் பெரும் மாற்றங்கள் பற்றி புரிய வைப்பது கடினம். வாழ்தலுக்கான அடிப்படை அர்த்தம் வாழ்தல் மட்டும்தான். வாழ்தலை இன்னும் அழகாக்க வல்லவை கதைகள்.

நான் வாசித்ததில், என்னைப் பெரிதும் பாதித்த, என்னுள் ஒரு பிறழ்ச்சியை ஏற்படுத்திய கதைகள் என்று நான் கருதுபவை:

1. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

2. ஹாரி பாட்டர் முழு தொகுப்பு- J.K. Rowling

3. இடைவெளி - எஸ்.சம்பத்

4. The Monk Who Sold his Ferrari- Robin Sharma

5. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

6. யானை டாக்டர் - ஜெயமோகன்

7. Eleven Minutes- Paulo Coelho

(இந்தப் பட்டியலே ஒரு கட்டுரையாகிவிடும் என்ற காரணத்தினால், இதோடு நிறுத்துகிறேன்!)

“என் வாழ்நாளில்” என்று சொல்லுமளவுக்கு நான் பெரிதாக வாழ்ந்துவிடவில்லைதான். ஆனால் இத்தனை ஆண்டுகள் என்னை உருவாக்கியதில், ஆற்றுப்படுத்தியதில் பெரும்பங்கு புத்தகங்களுக்கே. வீட்டுக்குள்ளேயே வாழ வேண்டிய சூழல் இருந்தபோதும், சிறிதளவும் என்னைத் துன்பத்தில், எண்ணச் சுழற்சியில் சிக்கவிடாமல் காப்பாற்றியவை புத்தகங்கள். இன்று நான் உலகை இப்படிக் காண்கிறேன் என்றால், அதற்கும் புத்தகங்கள்தான் காரணம்.

நமக்கு உதவி செய்த ஒருவருக்கு, மிகவும் நெருக்கடியான சூழலில் நமக்கு ஆதரவளித்தவர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறுவோம்? எவ்வளவு கொண்டாடுவோம்? நான் மனம் உடைந்திருக்கும்போதெல்லாம் தஞ்சம் புகுந்தது புத்தகத்தில்தான்; வாழ்வின் புரியாத புதிர்களை எதிர்கொள்ளும் தைரியத்தை எனக்கு வழங்கியது புத்தகங்கள்தான்; என்னை நானாக உருவாக்கியது புத்தகங்கள்தான்.

வாழ்நாள் முழுமைக்கும் புத்தகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். புத்தகங்கள் கொண்டாட்டத்திற்குரியவை. ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். இன்று கூடுதலாகக் கொண்டாட வேண்டும்.

ஏனென்றால், இன்று உலகப் புத்தகத் தினம்!

இனிய புத்தகத் தின வாழ்த்துகள் சகாக்களே…

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை