விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்துப் புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதிகொண்டு முடிவின்றி இப்புவியினை
நான் பார்த்துக் கொண்டே இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும், மழலைகளின்
கொண்டாட்டமுமாய்
என்வாழ்வை நான் இயற்றிடலாம் என்றெண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் களங்கமின்மை நாடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துகிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெய்யிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்புக் கனலும் சுக்கு வெந்நீர்க்காரனாகி
நடமாடவும் விரும்பினேன்
இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்.
No comments:
Post a Comment